Monday, December 4, 2017

பாரதம் தந்த பரிசு

பாரதம் தந்த பரிசு


ஈழத்தில் இந்தியப்படை, இந்திய சமாதானம் காக்கும் படை (Indian Peace Keeping Force-IPKF) என்ற பெயரில் வந்திறங்கியதும் இலங்கை - இந்திய ஒப்பந்தம் என்ற ஆவணத்தில் அப்போதைய இந்தியப் பிரதமர் ராஜீவ்காந்தியும் இலங்கை அதிபர் ஜே.ஆர். ஜெயவர்த்தனவும் கையெழுத்திட்டதும் முப்பதாண்டுகளுக்கு முன்பு.
1987 ஜூலையிலிருந்து 1990 மார்ச் வரை ஒரு லட்சம் இந்தியப் படையினர் ஈழத்தின் வடகிழக்கில் தமிழ்மக்களும் முஸ்லிம்மக்களும் வாழ்கிற பகுதிகளில் முகாமிட்டிருந்தார்கள். அந்தக் காலப் பகுதியில் நடந்த அவலங்கள், படுகொலைகள், பாலியல் வன்புணர்வுகள், வதைகள் பற்றிய வாய்மொழிக் கதைகளும் வாக்குமூலங்களும் இருந்தாலும் எழுத்துப் பதிவுகளும் ஆவணங்களும் மிக அதிகமாக இல்லை. தகவல்கள், செய்தி அறிக்கைகள், இலக்கியப் பதிவுகள் பல உள்ளன. எனினும் இவை ஒழுங்காகத் தொகுக்கப்பட்டு இன்னும் ஆவணப்படுத்தப்படவில்லை. இணையத்தில் தேடுபவர்களுக்குக் கிடைக்கக் கூடிய விவரங்கள் ஆச்சரியம் தரும் வகையில் சொற்பமே. இந்தியப் படையினர் ஈழத்திலிருந்த காலத்தை அப்படியே மறைத்துவிடுகிற முயற்சி எடுக்கப்பட்டுள்ளதோ என்ற சந்தேகமும் எழுகிறது. இந்தியாவில் வெளியாகும் ஆங்கில நாளேடுகளில் அக்கால கட்டத்துப் பதிவுகளைத் தேடிப் பார்ப்பவர்களுக்கு அவையெல்லாம் பெருமளவுக்கு இந்திய அரசினதும் படையினரதும் தகவல்களையும் எண்ணங்களையும் திருப்பித்திருப்பித் தருவதாகவே இருப்பது தெரியவரும்.
இந்தச் சிறப்புப் பகுதி, மாபெரும் வரலாற்றுத் துயரத்தின் ஒரு சில கண்ணீர்த்துளிகளை மட்டுமே நினைவெழுத லூடாகவும் கவிதைகளூடாகவும் காட்டுகிறது. மறக்க நினைக்கும் அவலங்கள் மறுபடிமறுபடி மேலெழுவது அஞரின் (Trauma) விளைவு.
இந்தக் காலகட்டத்தை மறந்தும் விடுதலைப் போராட்டத் தைக் கைவிட்டும் ஈழத்தில் வாழும் தமிழர்கள் வேறு முன்னேற்றப் பாதைகளுக்குச் சென்றுவிட்டார்கள். புலம்பெயர்ந்த, நாடு கடந்த, தாயகம் கடந்த தமிழர்கள் தான், இன்னும் நெருப்பைக் காவிக்கொண்டு, நொறுங்கிய இதயங்களோடு வெறுப்பையும் இந்திய எதிர்ப்பையும் ஈழக்கனவையும் வளர்க்கிறார்கள் என்ற கருத்து நிலையே இலங்கை அரசினதும் இந்திய அரசினதும் கொள்கை வகுப்பாளர்கள், ஆலோசகர்கள், கல்விப்புலத்தைச் சேர்ந்த பலரினதும் கருத்தாக உள்ளது. வரலாற்று அறிஞர் ரோமிலாதாப்பர்கூட இத்தகைய ஒரு கருத்தைத்தான் சில ஆண்டுகளுக்கு முன்பு கொழும்புவில் சொல்லியிருந்தார். புலம்பெயர்ந்தோரையும் நாடுகடந்த நிலையில் வாழ்வோரையும் (Diasporic and Transnational communities) அவர்களது அரசியல், அனுபவங்கள், உறவுகள் என்பவற்றை ஒற்றைப்படையாகப் பார்க்கிற இந்தப் பார்வை இப்போது பொருந்தாது. தொலைவு பொறுப்பின்மையையும் தரலாம், பொறுப்பையும் தரலாம் என்கிற நுட்பமான பார்வை நமக்கு அவசியம். தென்னாபிரிக்காவில்ஆபிரிக்க தேசிய காங்கிரசுக்கும் இனவெறி அரசுக்கும் பேச்சுவார்த்தைகள் ஆரம்பித்த வேளை, “கடந்த காலத்தை மறப்போம்; வன்முறையை மறப்போம்” என்ற கோட்பாடு முன்வைக்கப்பட்டது. கடந்த
காலத்தை அவ்வளவு எளிதில் மறந்துவிட முடியுமா? தீர்வும் முடிவும் நிறைவும் இல்லாவிட்டால் கடந்த காலம் திருப்பித்திருப்பி எழுதப்படும் அல்லவா?
ஈழத்தில் இந்தியப் படைக்காலம் பற்றி இரண்டு வகையான வெளியீடுகள் வந்துள்ளன. ஒன்று, இந்தியப் படையின் உயர் தளபதிகளாகப் பணியாற்றியவர்கள், இராஜதந்திரிகளின் அனுபவங்களும் ஆய்வுகளும். மற்றது, தமிழில் வெளியான ஆவணங்கள், வாக்குமூலங்கள், இலக்கியப் பதிவுகள், நூல்கள். தமிழில் இருப்பவை பல இப்போது நூலகம் நிறுவனத்தின் வலைத்தளத்தில் எண்ணிம வடிவில் கிடைக்கின்றன (www.noolaham.org) இந்தியப் படைக் கால கட்டத்தைப் பற்றி மேலும் அறிய விரும்புபவர்களும் அந்த வரலாற்றுத் துயரத்தின் வேர்களையும் ஊற்றுக்களையும் கண்டறிய முனைவோரும் பின்வருவனவற்றைத் தேடலாம்: இது முழுமையான பட்டியல் அல்ல என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.
1. யாழ்ப்பாணத்தில் இருந்து வெளியான நாளிதழ்கள்.
2. சரிநிகர் இதழ்கள் (1990-2001)
3. தூண்டில் இதழ்கள். ஜேர்மனி.
5. திசை, வார வெளியீடு. யாழ்ப்பாணம்.
6. 1989 காலகட்டத்துக் கொழும்புப் பத்திரிகைகள்.
7. ‘சிங்கத்தின் நகங்களும் அசோகச்சக்கரமும்’ (ஈழம் - காலச்சுவடு பதிவுகள்: 1988-2008)
8. அனுபவப்பதிவுகளாக, ‘வில்லுக்குளத்துப் பறவைகள்’, ‘அம்மாளைக்கும்பிடுறானுகள்’ ஆகிய நூல்கள். ஆய்வுகளும் தகவல்களுமாக, ‘முறிந்த பனை’, ‘வல்வைப்படுகொலை.’
ஆங்கிலத்தில் வெளியானவற்றில் பின்வருவன தேவையானவை.
1. Saturday Review, Sri Lanka, இதனுடைய கடைசி இதழ் ஒக்டோபர் 17, 1987 வெளியானது.
2. Amnesty International அறிக்கைகளும் செய்திகளும்.
3. New Saturday Review, Colombo. 1987-1988; 1990-1991.
4. ‘University Teachers for Human Rights’ (Jaffna) ÜP‚¬èèœ: http://www.uthr.org/Reports/Report3/chapter 8.htm
5. Tamil Times. London. UK.
  
6. ‘Memorial for IPKF – Innocent People Killing Force.’
இலங்கையில் மிக உயர் பதவியில் இருந்து இளைப்பாறியவர் கலாநிதி சோமசேகரம். அவருடைய நினைவுக் குறிப்புகள்.
7. ‘In the Name of Peace:  IPKF Massacres of Tamils in Sri Lanka.’
‘Northeast Secretariat on Human Rights’ (NESoHR)
திரட்டிய ஆவணங்களின் நூல் வடிவம் தில்லித் தமிழ் மாணவர் சங்கத்தால் வெளியிடப்பட்டது. இது இந்தியப் படையினர் புரிந்த படுகொலைகளில் பன்னிரண்டை ஆவணப்படுத்தி உள்ளது.
இந்தியப் படைத் தளபதிகள், அதிகாரிகள் எழுதியுள்ள நூல்களும் அவசியமானவை. இவை இந்தியப்படைத் தரப்பின் வாதங்களையும் கருத்துக்களையும் முன்வைக்கின்றன. இந்த நூல்களில் இந்தியப் படையினர் புரிந்த அநியாயங்கள், படுகொலைகள் பற்றிப் பேசப்படவில்லை. “தவிர்க்க முடியாத பக்க விளைவு,” என்றும், “புலிகளையும் பொதுமக்களையும் வேறுபடுத்தி அறிய முடியாததால் பொதுமக்களையும்  கொலைசெய்ய வேண்டியிருந்தது,” என்றும் “போர்ச் சூழலில் மக்கள் கொலைகள் தவிர்க்க முடியாதவை,” என்றும் காலங்காலமாகப் படைத்தரப்புகளும் அரசுகளும் சொல்கிற போலி நியாயங்கள் தரப்படுகின்றன. கூடவே சில நூல்களில் இந்திய அரசு, படைத் தரப்பின் குழப்ப நிலை, ஈழக்கள நிலவரம் பற்றி உரிய, போதுமான புலனாய்வுத் தகவல்கள் இல்லாமை போன்ற விமர்சனங் களும் இடம்பெறுகின்றன. அதிகாரிகள், படைத் தளபதிகள், அரசியல்வாதிகளுக்கிடையே ஏற்பட்ட பிணக்குகளும் அகங்கார, ஆளுமைப் பிரச்சினைகளும்கூட இந்த நூல்களில் பேசப்படுகின்றன.
8. ‘Intervention in Sri Lanka .  The IPKF Experience Retold’ by Maj. Gen. Harikirat Singh. 2007.
ஹரிகிரத் சிங்தான்இந்தியப்படைகளின்கட்டளைத் தளபதியாக இருந்தவர். 1987 செப்டெம்பர் மாதம் பிரபாகரனைச் சுட்டுக் கொல்லுமாறு ஜே.என். தீக்ஷித் உத்தரவிட்டதாகவும் அதனைச் செய்ய மறுத்ததால் இலங்கையை விட்டுத் தான் 1988 ஜனவரி மாதம் வெளியேற்றப்பட்டதாகவும் இந்த நூலில் எழுதுகிறார் ஏ.ஜீ. நூரானி. இந்தியத் தளபதி சுந்தர்ஜியையும் தீக்ஷித்தையும், : அகங்காரமும் ஆடம்பரமும் மிக்கவர்கள்’ என்று தனதுகட்டுரையொன்றில் விமர்சிக்கிறார். ஹரிகிரத் சிங்கின் வெளியேற்றத்துக்கு அவர்கள் இருவருமே பொறுப்பு என்கிறார்.
9. ‘Assignment Jaffna’  by Lt. Gen. S.C. Sardeshpande. (Lancer Publishers, 1991)
யாழ்ப்பாணத்துக்குப் பொறுப்பாக இருந்த படைத் தளபதியின் நினைவுகள். ஒப்பரேஷன் பவான் (Operation ‘Pawan’) என்ற படை நடவடிக்கைக்குப் பொறுப்பாக இருந்தவர். இந்த நடவடிக்கை யாழ் பல்கலைக்கழக விளையாட்டுத் திடலில் இந்தியக் கொமாண்டோக்களை இறக்க முயற்சி செய்த நடவடிக்கை. இந்தத் தாக்குதலைப் புலிகள் முறியடித்தார்கள். 39 இந்தியக் கொமாண்டோப் படையினர் கொல்லப்பட்டனர். இந்த நூலில் நாகாலாந்து, மிஸோராம் ஆகிய இடங்களில் இந்தியப்படையினரின் நடவடிக்கைகளையும் யாழ்ப்பாண நடவடிக்கைகளையும் ஒப்பிடுகிறார்.
10. ‘The IPKF in Sri Lanka by Lt. Gen. Depinder Singh (Trishul Publications, Noida, 1991)
இந்திய உளவு சேவையான RAW பற்றிய காட்டமான விமர்சனங்களை இந்த நூலில் காணலாம்.
11. ‘India’s Vietnam’  by Col. John Taylor (rediff.com)
இணையத்தில் கிடைக்கிறது.
12. ‘Assignment Colombo’, J.N. Dixit.1988.
நெருக்கடி மிக்க காலத்தில் இலங்கையில் இந்தியத்தூதராகப் பணியாற்றிய ஜே.என். தீக்ஷித்தின் நூல். மிக முக்கியமான அனுபவங்களைப் பதிவு செய்கிறார்.
அக்காலத்தில் சில ஆண்டுகள் இந்தியாவின் வெளியுறவுத்துறைச் செயலாளராகப் பணியாற்றிய ரொமேஷ் பண்டாரியுடனான அனுபவம் ஒன்றை தீக்ஷித் பின்வருமாறு விவரிக்கிறார்: தமிழ்க் கூட்டமைப்புக்கும் அரசுக்கும் இடையே பேச்சு வார்த்தைகள் எமது அனுசரணையுடன் நிகழ்ந்த வேளை தில்லி திரும்புமுன் கொழும்பு விமான நிலையத்தில் வைத்து என்னிடம் இரு முக்கியமான ஆவணத்தை பண்டாரி தந்தார். “இதனைத் தமிழ்த் தலைவர் செல்வநாயகத்திடம் சேர்ப்பித்து விடுங்கள் என்று சொன்னார். ஆச்சரியத்துடன் செல்வநாயகம் எப்போதோ செத்துப்போய் விட்டாரே,” என்று நான் சொன்னேன்.
“சரி, அப்போ அமிர்தலிங்கத்திடம் கொடுத்துவிடுங்கள். இந்தத் தென்னிந்தியப் பெயர்கள் எல்லாமே எனக்கு எப்போதும் குழப்பமாக இருக்கிறது,” என்றார் பண்டாரி.
13. ‘Sri  Lanka Misadventure: India’s Military Peace-keeping Campaign, 1987-1990’ by Gautam Das, and MrinalK.Gupta Ray
இந்திய அரசையும் படையையும் விமர்சனரீதியாக அணுகுகிற நூல்.
14. ‘Operation ‘Pawan’ by Kuldip Singh Ludra. 1999.
யாழ்ப்பாணத்தைக் கைப்பற்ற இந்திய ராணுவம் மேற்கொண்ட படையெடுப்பை விவரிக்கிறது.
India’s My Lai: Massacre at Valvettithurai: வல்வைப் படுகொலை நூலின் விரிவாக்கிய ஆங்கிலப் பதிப்பு. பல வாக்கு மூலங்களும் சத்தியக்கடதாசிகளும் (Affidavits) இணைப்பில் தரப்பட்டுள்ளன.
Indo-LTTE war: http://www.sangam.org/2007/11/Indo_LTTE_War_Anthology.php?uid=2643-?iframe=true&width=100% & height=100%
போர் தொடர்பான ஊடகச் செய்திகள் அனைத்தையும் தொகுத்து தனது முற்குறிப்புகளுடன் பல பாகங்களாக நியூயோர்க் இலங்கைத் தமிழ்ச் சங்கத்தின் இணையத்தளத்தில் வெளியிட்டுள்ளார் பேராசிரியர் சச்சிசிறீகாந்தா.
India Today இந்தியப் படையினரின் யுத்தங்கள் தொடர் பான தொலைக்காட்சித் தொடர் ஒன்றில் விடுதலைப் புலிகளுக் கும் இந்தியப்படைகளுக்கும் இடையான போர் பற்றிய பல பாகங்கள் உள்ளன. Guns and Glory  என்ற இத் தொடர் யூட்யூபில் கிடைக்கிறது. இந்தியப் படையினரின் ‘சாகசங்க’ளையும் ‘சாதனை’களையும் சொல்லும் பாணியிலேயே இவை உள்ளன.
இந்த நூல்களுக்கும் ஆவணங்களுக்கும் கொள்கை வகுப்புக் கோப்புகளுக்கும் அப்பால், கண்ணீரும் தசையுமான நமது நினைவுகளை முப்பது ஆண்டுகளுக்குப் பிறகு மீள எடுத்துப் பார்க்கிறபோது இந்தக் காயங்களின் வலி எப்போதுமே ஆறாதது என்பது துலக்கமாகத் தெரிகிறது.
இந்தச் சிறப்புப் பகுதியைத் தொகுக்க எனக்கு உதவிய நண்பன் மஜேந்திரன் ரவீந்திரனுக்கும் தமது பெயரை வெளியிட விரும்பாத வேறிரு நண்பர்களுக்கும் என் மனமார்ந்த நன்றி.
பாரதம் தந்த பரிசு- எனும் தலைப்பு எனது தமிழாசிரியர் செ. கதிரேசர் பிள்ளையின் புகழ்பெற்ற புராண நாடகங்களின் திரட்டு நூல் ஒன்றின் தலைப்பாகும். அவருக்கும் அவரது தலைமுறைக்கும் பாரதமும் காந்தியும் சுபாஷ் சந்திர போசும் நெஞ்சுள் நிறைந்தவை. இந்திய சுதந்திரப் போராட்டத்துக்கு ஈழத்தின் வடக்கிலும் கிழக்கிலும் நிதி சேர்த்து வழங்கியது அவரது தலைமுறை. அந்த வரலாற்றின் அடியே தெரியாதவர்கள் கையில் இப்போது இருக்கும் பாரதம் வேறு. இந்தப் பாரதம் நமக்குத் தந்த பரிசு பற்றியதே இந்தச் சிறப்புப் பகுதி. இது எமது ‘ஆறாவடு’வின் ஒரு சிறிய சஞ்சலப் படம். அழிய மறுக்கும் குருதிக் கோடு.

No comments:

Post a Comment