Saturday, October 10, 2020

கலிங்கத்துபரணி காம ஆபாச இலக்கியமா?

 கலிங்கத்துபரணி காம ஆபாச இலக்கியமா? பேசாலைதாஸ்


அன்பர்களே முன்பு நான் எந்து சிறுகதை வலைத்தளமான நிலாமதி www.nilaamathy.blogspot.com காமம் காதல் கடவுள் என்ற தலைப்பில் ஒரு கட்டுரையை வெளியிட்டேன், அது பற்றி என்னை பலர் தவறாக மதிப்பிட்டனர், அது அவர்களின், அறிவின், புரிதலின், தேடலின் அளவு என்று எண்ணிக்கொண்டேன், அதுபற்றி எனக்கு ஏதும் அக்கறை இல்லை, காதலைப்பற்றியும், காமத்தைபற்றியும்,கடவுள் பற்றியும் நம் முப்பாட்டானருக்கும், பாட்டனார்கள் அறிந்துவைத்திருந்தலில், இம்மி அளவு கூட நாம் இல்லை என்பதே எனது வாதம்! எனது பேசாலை கிராமத்தவர் அபிப்பிராயம் பற்றிய எந்த கவலையும் இல்லாமல் என் தேடலை நான் தேடுகின்றேன், நீங்களும் சேர்ந்து தேடுங்கள் 

முதலில் கலிங்கத்துப்பரணி பற்றி கொஞ்சம் தெரிந்து கொள்வோம், இது சங்ககால இலங்கியங்களில் ஒன்று, புறநானூறு போல, இதுவும் தமிழர் தம் காதலையும், வீரத்தையும் எடுத்தியம்புகின்றது. கலிங்கத்துப்பரணி ஆபாசத்தை பற்றி கூறவில்லை,காமத்தை மற்றும் அதன் வெளிப்பாட்டை மட்டுமே கடை திறப்பில் செயங்கொண்டார் விவாதித்துள்ளார். 

                                               முதலில் காதலினால் வரும் காமத்திற்கும் ,காமத்தினால் வரும் ஆபாசத்திற்கும் இடையே உள்ள வேறுபாட்டினை புரிந்து கொள்ளுங்கள் .காதலின் வெளிப்பாடு ஆபாசம் என்று நினைப்பது தவறு .உதாரணமாக ஒருவர் தன் மனைவியின் மீது கொண்ட காதலினால் கலவியால் புணர்தல் ஆபாசம் அன்று.அவர் தம் காமவேட்கையினால் மாற்றார் மனைவி மீதோ அல்லது வேறு ஒரு பெண்ணின் மீது வெளிப்படுத்தும் உணர்வு தான் ஆபாசம் .

"மனிதப் பாலுணர்வுகளை இலகுவில் தூண்டக் கூடிய வகையில் காட்சிகள் அல்லது நடத்தைகள் அமைவது" ஆபாசம் எனப்படும். "மனிதன் பாலுணர்வுக்கு அடிமையாவதால்.. தனி மனித மற்றும் சமூக ஒழுக்கங்கள்..( இவை மனித வாழ்வியலுக்கு அவசியம்).. சீர்குலைய நேரிடலாம் என்ற வகையில்" ஆபாசம் சமூக அமைப்புகளினது தடை அல்லது கட்டுப்படுத்தலுக்கு உட்பட்டது.

இப்போது இலக்கியத்தில் கூறியுள்ள புணர்ச்சி பற்றி பார்க்கலாம் .

சங்ககாலத்தில் ஐவகை நிலங்களையும் ஐவகைப் பண்பாடுகளையும் காண்கிறோம். திணை என்பது நிலத்தையும் ஒழுக்கத்தையும் குறிப்பதாகவும் பொருள் கொள்ளப்படுகிறது. அகத்திணை ஒழுக்கங்களாக புணருதல் (குறிஞ்சி), இருத்தல் (முல்லை), ஊடல் (மருதம்), இரங்கல் (நெய்தல்), பிரிதல் (பாலை) எனச் சங்கப் புலவர் மரபு வரையறை செய்துள்ளது. ஒழுக்கம் அல்லது நடத்தை அவர்களின் பொருளில் வாழ்வின் பிம்பங்களாக பிரதிபலிக்கிறது.

தகாப்புணர்ச்சி அல்லது அகமணம் என்ற நிலையிலும், வேட்டையை மட்டும் பொருளியல் அடிப்படையாகக் கொண்டதுமான தாய்வழிச் சமூகத்தை சங்க இலக்கியம் பதிவு செய்யவில்லை. மாறாக தகுபுணர்ச்சியும்(புறமணம்) வேட்டையுடன் உணவு சேகரிக்கக் கற்றுக் கொண்டதுமான இனக்குழு (தாய்வழிச் சமூகம்) சமூகத்தையே காண முடிகிறது. அக மணமுறையிலிருந்து புறமணமுறைக்கு நுழையும் பொழுது, அச்சமூகம் பண்பாடு என்ற எல்லைக்குள் நுழைந்துவிடுகிறது. இதற்கான பொருளியல் காரணங்கள் இருக்கவே செய்தன. வேட்டையின் பலன் நிச்சயமற்று இருந்ததால் பழங்கள், காய்கறிகள், தேன், கிழங்குகள் ஆகிய உணவுப்பொருட்களை சேமிக்கத் தொடங்கினர்.

“காமம் கைம்மிகின் தாங்குதல் எளிதோ” (நற்றிணை:39)

“மருந்து பிறிதில்லை யான் உற்ற நோய்க்கே” (நற்-80)

காமம் மிகுதியுற்று, கூடமுடியாத நிலையில், அதை ஒரு நோய் என்றே கருதினார்கள். “இவள் உயிர் தவச் சிறிது, காமமோ பெரிது” எனக் கபிலரும் பாடுகிறார்.

“உள்ளின் உள்ளம் வேமே, உள்ளாது/ இருப்பின் எம் அளவைத்து அன்றே” (குறு:102).“காதலரை நினைத்திருந் தால் பிரிவு என்னும் தீயினால் நினைக்கின்ற என் மனம் வேகிறது. நினையாமல் உயிர் மட்டும் இருந்தால், அதைத் தாங்கும் ஆற்றல் எனக்கு இல்லை” எனத் தலைவியும், “பெயல் நீர்க்கு ஏற்ற பசுங்கலம் போல/ உள்ளம் தாங்கா வெள்ளம் நீந்தி/ அரிது அவாவுற்றனை நெஞ்சே” (குறு:29) “அவளால் (பெண்ணால்) தன் உள்ளம் மழையில் கரையும் பசுங்கலம் (சுடாத கலம்) போலக் கரைந்ததாக தலைவனும் கூறுகிறான். புணர்ச்சியை இயற்கையாகவே கண்டனர். பண்பாட்டு அசைவானது, சங்க இலக்கியத்தில், அடுத்தத் தளத்திற்கு நகர்ந்து செல்வதையும் காண்கிறோம். கிடைத்த போது களவு மிகப்பெரிய மகிழ்ச்சியையும், கிட்டாத போது நோயாகவும் மாறியதைப் பார்த்தோம். ஆனால் சங்கத் தலைவன், தனது தலைவியுடன் ஏற்பட்ட களவுப் புணர்ச்சியானது தனது மனவலிமை, தனது அறிவு ஆகியவற்றைக் குறைத்துவிட்டதாகக் கூறுவது தெரிகிறது.

இவை அனைத்தும் காமத்தின் வெளிப்பாடாய் கூறும் இலக்கிய நூல் .

இப்போது பரணியை பற்றியும் கடைதிறப்பு பற்றியும் பார்க்கலாம்

பன்னிரண்டாம் நூற்றாண்டில் செயங்கொண்டாரால் பாடப்பட்டது கலிங்கத்துப் பரணி. முதலாம் குலோத்துங்க சோழன், கலிங்க நாட்டு அரசன் அனந்தவன்மனை வெற்றி கொண்ட போர்தான் கலிங்கப்போர். இன்றைய ஒரிஸ்ஸாவின் கீழ்ப்பகுதிதான் கலிங்க நாடாக விளங்கியது. பரணி என்றால் போரில் ஆயிரம் யானைகளைக் கொன்ற வீரனைப் பாடும் பாடல் என்று பொருள்.

கருணாகரன் என்ற தளபதியைக் கொண்டு முதல் குலோத்துங்க சோழன் அனந்தவன்மனை வென்ற கலிங்கப் போரைப் பற்றியதே கலிங்கத்துப் பரணி.

கலிங்கப் போர் முடிந்து சோழ வீரர்கள் ஏராளமான செல்வங்களுடன் நாடு திரும்புகிறார்கள். வந்து வீட்டுக் கதவைத் தட்டுகிறார்கள். ஆனால் அவர்கள் மனைவியர் கதவைத் திறக்க மறுக்கின்றனர். ‘ஏன் இந்தத் தாமதம், ஒரு போர் முடிக்க இத்தனை நாட்களா?’ என்று கோபம் கொண்டு கதவைத் திறக்க மறுக்கிறார்களாம்! வீரர்கள், தங்கள் போர்ப் பராக்கிரமத்தைச் சொல்லி பெருமிதம் கொள்ள நினைத்து வந்த வேளையில் இந்தக் கதவடைப்புப் போராட்டத்தை எதிர்பார்க்கவில்லை. கதவைத் திறக்க வீரர்கள் பாடுவதாய் அமைந்ததுதான் “கடை திறப்பு” என்ற முதல் அத்தியாயம்.

கலிங்கத்துப் பரணி இப்படித்தான் தொடங்குகிறது. செயங்கொண்டார் கதை சொல்லும் விதமே வித்தியாசமானது. வெறும் போரையும் களத்தையும் மட்டுமே பாடவில்லை. நடுவிலே பேய்கள், அவற்றின் தலைவியாக காளி, காளியின் கோயில் என்று கதையைப் பின்னியிருக்கிறார். வெறும் பாடல்களை மட்டுமே வைத்துக் கொண்டு முழுக்கதையையும் புரிந்து கொள்வது என் சிற்றறிவுக்கு எட்டாத காரியமாகையால் சில சுவையான இடங்களையும் பாடல்களையும் பகிர்ந்து கொள்கிறேன்.

போர் பற்றிப் பாடியதால் ஒரே ரத்தக்களறியாக இருக்கும். காப்பியங்களில் நடந்த போர்களைப் பற்றித்தான் அதிகம்பேர் பேசுகிறார்கள். செயங்கொண்டரின் போர் விவரணை, அவற்றுக்கு சற்றும் சளைத்ததல்ல. செயங்கொண்டர் நடுவிலே பேய்களை உலவவிட்டதால் பயந்து ஓடிவிட்டார்கள் என்று நினைக்கிறேன். இந்தக் கட்டுரையில் சில ரத்தத்திட்டுகள் தெளிக்கும்; பேய்கள் உலாவும். பயந்த சுபாவமுள்ளவர்கள் கொஞ்சம் திடமாக இருக்குமாறு எச்சரிக்கிறேன்.

சோழ வீரர்கள் போர் முடிந்து வந்து கதவைத் தட்டுகிறார்கள். கதவைத் திறக்க மறுக்கும் மனைவியரிடம் பாடும் சில பாடல்களைப் பார்க்கலாம்.(குறிப்பு: பாடலின் அசல் வடிவத்தையும், எனக்குப் புரிந்த வரையில் சீர் பிரித்தும் தருகிறேன்.)

அளகபாரம் இசை அசைய மேகலைகள் அவிழ ஆபாரணம் இவை எ(ல்)லாம்

   இளக மாமுலைகள் இணையறாமல் வரும் இயனலீர் கடைகள் திறமினோ

  இதுதான் பாடலின் வியாக்கியானம்,

                                          விரிந்த கூந்தல் இசைக்கு நடனமாடுவது போல் அசைய, கணவர்தம்மைப் பிரிந்ததனால் இளைத்த இடையில் அணிந்திருக்கும் மேகலை அவிழ, மற்ற ஆபரணங்களும் கழண்டு விழ கொங்கைகள் இரண்டும் இணையாமல் நடந்து வரும் பெண்களே கதவைத் திறங்கள்!

இதை எப்படிக் கற்பனை செய்திருப்பார்? கதவிடுக்கின் வழியாகக் கண்ணை இடுக்கி உள்ளே நடந்து வரும் பெண்ணைப் பார்த்தாரா?!

அடுத்து தரப்போகும் பாடல் இன்னும் ஒரு படி அதிகம், அதுவும் பெண்களின் மார்பகங்களை பற்றி, 

முலைமீது கொழுநர் கை நகம் மேவு குறியை

முன் செல்வமில்லாதவர் பெற்ற பொருள்போல்

கலை நீவி யாரேனும் இல்லா இடத்தே

கண்ணுற்று நெஞ்சம் களிப்பீர்கள் திறமின்

(கொழுநர் – ஆடவர்; மேவு – விரும்பு; கலை – துணி)

இப்படி இன்னும் பல பாடல்களை பன்னிரண்டாம் நூற்றாண்டில் பாடியது வியப்பாகத்தான் இருக்கிறது. ஒரு வேளை அரச சபையில் ஆண்கள் மட்டுமே இருந்திருக்கலாம், அதனால் பாடியிருக்கலாம். அன்பர்களே காமம் காதல் கடவுள் பற்றி நம் முன்னோரின் புரிதலும், தற்கால இளைஞர் கொள்ளும் புரிதலும் மாறுபட்டுள்ளது. இதை நாம் மாற்றி அமைக்கவேண்டும்.  அன்புடன் பேசாலைதாஸ்

No comments:

Post a Comment